எப்போது, எப்படி முடிவுக்கு வரும் இந்தப் பெருந்தொற்று?- வரலாற்று ரீதியில் ஓர் அலசல் -- ஜீனா கொலாட்டா, தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
|Tue 12th May 2020 07:00 AM|General|
Page Views: 63
பெருந்தொற்றுகள் வழக்கமாக இரு வகைகளில் முடிவுக்கு வரும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஒன்று, மருத்துவ ரீதியிலான முடிவு. தொற்று விகிதமும் இறப்பு விகிதமும் குறையும்போது மருத்துவ ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும். இரண்டாவது, சமூக ரீதியிலான முடிவு. தொற்றுநோய் தொடர்பான பயம் முடிவுக்கு வரும்போது சமூக ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும்.
கரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்பவர்கள், சமூக ரீதியிலான முடிவு எப்போது என்பதைத்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவ வரலாற்றாசிரியரான டாக்டர் ஜெரிமி க்ரீனி.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு நோயின் முடிவு என்பது அந்நோய் முறியடிக்கப்படுவதன் மூலம் அல்ல; பீதி நிறைந்த சூழலால் சோர்வடையும் மக்கள், அந்த நோய்க்கு மத்தியில் வாழப் பழகிக்கொள்வதில்தான் இருக்கிறது.
கோவிட்-19 தொடர்பாக, ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றாசியர் ஆலன் பிராண்ட் சொல்வது இதைத்தான்:
பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான விவாதங்களில் நாம் ஒரு விஷயத்தைக் கவனித்திருப்போம். இந்தப் பெருந்தொற்றின் முடிவு தீர்மானிக்கப்படுவது தொடர்பான கேள்விகள், மருத்துவம், பொது சுகாதாரம் தொடர்பானவையாக அல்லாமல், சமூகப் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பானவையாகவே இருக்கின்றன.
பயத்தால் விளையும் பாதகம்
நோய்த் தொற்றே இல்லாமல்கூட பயம் எனும் தொற்று உருவாவதுண்டு. அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸில் பணிபுரியும் டாக்டர் சூஸன் முர்ரே, 2014-ல் அந்நாட்டின் கிராமப்புற மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்தபோது அதை நேரடியாக உணர்ந்திருக்கிறார்.
அதற்கு முந்தைய மாதங்களில், மேற்கு ஆப்பிரிக்காவில் 11,000க்கும் மேற்பட்டோர் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். பயங்கரமான அந்த வைரஸ் எளிதில் தொற்றக்கூடியது மட்டுமல்ல, அதிக உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக்கூடியதும் ஆகும். அந்தச் சமயத்தில் எபோலா தொற்றுநோய் பாதிப்பு குறைந்துகொண்டு வந்தது. அதுமட்டுமல்ல, அயர்லாந்தில் ஒருவருக்குக்கூட எபோலா தொற்று ஏற்படவில்லை. எனினும், மக்களிடம் அச்சம் உருவாகியிருந்தது தெளிவாகத் தெரிந்தது.
மருத்துவமனை வார்டுகளிலும் தெருக்களிலும் மக்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். நிறத்தின் அடிப்படையிலான சமூக விலகலைப் பேருந்துகளிலும், ரயில்களிலும் பார்க்க முடிந்தது. ஒருவர் இருமிவிட்டால், மற்றவர்கள் அவரிடமிருந்து சிதறி ஓடிவிடுவார்கள் என்று ‘தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ இதழில் சமீபத்தில் எழுதியிருக்கும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் சூஸன் முர்ரே.
மிக மோசமான சூழலுக்குத் தயாராக இருக்குமாறு டப்ளின் நகர மருத்துவமனை ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டார்கள். போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், அவர்கள் பயமும் கவலையும் அடைந்தார்கள். எபோலா தொற்றுநோயாளிகளைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து வந்திருந்த ஓர் இளைஞர், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்தபோது அவர் அருகில் செல்லக்கூட யாரும் விரும்பவில்லை. செவிலியர்கள் பயந்து பதுங்கிக்கொண்டனர். மருத்துவர்களோ, மருத்துவமனையைவிட்டு வெளியேறப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.
அவருக்குச் சிகிச்சையளிக்க டாக்டர் முர்ரே மட்டும் துணிச்சலுடன் முன்வந்தார். ஆனால், 'அந்த இளைஞருக்குப் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்ததால், ஆறுதலுடன் கூடிய மருத்துவப் பராமரிப்பை மட்டுமே அவருக்குத் என்னால் வழங்க முடிந்தது' என்று எழுதியிருக்கிறார் டாக்டர் முர்ரே. அந்த இளைஞருக்கு எபோலா தொற்று இல்லை என்பது சில நாட்களில் கண்டறியப்பட்டது. எனினும், பரிசோதனை முடிவு வெளியான ஒரு மணிநேரத்தில் அவர் மரணமடைந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, எபோலா தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனமே அறிவித்துவிட்டது.
பயத்தையும் அறியாமையையும் எதிர்த்துத் தெளிவான சிந்தனையுடன் தீவிரமாகப் போரிட நாம் தயாராக இல்லை என்றால், அந்தப் பயத்தின் காரணமாக விளிம்புநிலை மக்களுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். ஒருவருக்குக்கூட தொற்று ஏற்படாத இடங்களில்கூட அப்படியான சூழல் உருவாகும். இனம், பொருளாதார நிலை, மொழி போன்ற பிரச்சினைகள் ஒரு பயத்தின் தொற்றுடன் சேர்ந்துவிட்டால், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறார் டாக்டர் முர்ரே.
உலகை உலுக்கிய ப்ளேக்
கடந்த 2,000 ஆண்டுகளில் பல முறை பாதிப்பை ஏற்படுத்திய பூபோனிக் ப்ளேக் நோய் பல லட்சக்கணக்கானோரைக் கொன்றதுடன், வரலாற்றின் போக்கையே திசைமாற்றியிருக்கிறது. ஒவ்வொரு முறை அந்தத் தொற்றுநோய் ஏற்படும்போதும் அதன் தீவிரத்தை, பயம்தான் பன்மடங்கு பெருக்கியது.
எலிகளின் உடலில் இருக்கும் உண்ணிகளில் வாழும் யெர்ஸினியா பெஸ்டிஸ் எனும் பாக்டீரியாவின் துணைப் பிரிவின் மூலம் ஏற்படுவது பூபோனிக் ப்ளேக் நோய். எனினும், அது கறுப்பு மரணம் என்று அழைக்கப்பட காரணம், தொற்றுக்குள்ளானவரின் சுவாசத் துளிகள் (தும்மல், இருமலின்போது வெளிப்படும் திரவம்) மூலம் அடுத்தவருக்கும் நோய் பரவிவிடும் என்பதால்தான். எனவே, எலிகளைக் கொல்வதன் மூலம் மட்டுமே, அந்த நோயை ஒழித்துவிட முடியாது.
மூன்று முறை ப்ளேக்கின் பேரலைகள் ஏற்பட்டன என வரலாற்றாசிரியர்கள் கூறியிருப்பதாகச் சொல்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் மேரி ஃபிஸல். அவை கி.பி 6-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ப்ளேக் ஆஃப் ஜஸ்டீனியன்;
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.