ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனால்ட் டிரம்ப்!
|Wednesday, 25th November 2020|Political|
Page Views: 1
|
|
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யத் தொடங்க, டொனால்ட் டிரம்ப் சம்மதித்து இருக்கிறார்.
எனினும், தாம் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக அவர் இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை.
அதிபர் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்ப்பேன் என உறுதியாகக் கூறியுள்ள போதும், பைடன் அதிபர் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் எனும் முக்கியமான அரசு அமைப்பிடம் பரிந்துரைத்து இருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் டிரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகார மாற்றத்தை முன்னின்று செய்யும் ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு, ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது என்று சொல்லி இருக்கிறது. டிரம்பால் நியமிக்கப்பட்ட இதன் நிர்வாகிகள் இதற்கு முன்பு வரை ஜோ பைடனை தேர்தல் வெற்றியாளராக உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர்.
ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அதிபர் அதிகார மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த நடவடிக்கைகளை அமைப்பு தொடங்கும் என்றும் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதிபராகத் தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு 6.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஜி.எஸ்.ஏ நிர்வாகி எமிலி மர்ஃபி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மிஷிகன் மாகாணத்தில், ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது டிரம்புக்கு பெரிய அடியாக அமைந்தது.
ஜோ பைடன் அணியினர், இந்த அதிகார மாற்றத்தின் தொடக்கத்தை வரவேற்று இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும், நாடு சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், இன்று எடுத்திருக்கும் முடிவுகள் அவசியமான ஒன்று என ஜோ பைடன் அணியினர் கூறி இருக்கிறார்கள்.
இந்த இறுதி முடிவு, அரசு அமைப்புகள் முறையாக அதிகார மாற்றத்தைத் தொடங்க, ஓர் உறுதியான நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எனவும் கூறி இருக்கிறது பைடனின் தரப்பு.
|
|