இந்தோனீசிய பயணிகள் விமானம் கடலில் விழுந்தது?
|Sunday, 10th January 2021|Crime|
Page Views: 1
|
|
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பேரோடு சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் கடலில் விழுந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
கிளம்பிய நான்கே நிமிடங்களில் அந்த விமானத்தின் தொடர்பு அறுந்தது.
ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் அதே நாட்டில் உள்ள மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
போர்னியா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த நகருக்கு செல்வதற்கான பயண நேரம் வழக்கமாக ஒன்றரை மணி நேரம்.
கிளம்பிய சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலையத்துடன் அந்த விமானத்தின் தொடர்பு அறுந்தது.
உள்ளூர் நேரப்படி பகல் 2.40 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரம்-7.40) அந்த விமானத்தோடு கடைசி தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
அந்த விமானம் பறந்துகொண்டிருந்த உயரம் திடீரென ஒரே நிமிடத்தில் 10 ஆயிரம் அடி குறைந்தது என்கிறது விமான கண்காணிப்பு இணைய தளமான Flightradar24.com
லகி தீவு முதல் லேன்காங் தீவு வரையில் மீட்புதவிப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை ( Basarnas) அதிகாரி பம்பாங் சூர்யோ அஜி தெரிவித்துள்ளார்.
இந்த இடம், பேன்டன் மாகாணத்தில் உள்ள தன்ஜுங் கெய்ட் என்ற இடத்தில் இருந்து 3 மைல் தொலைவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
விமானத்தின் சிதைவுகளைப் போலத் தோன்றும் பொருள்கள் தென்படுவதாக அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அவை உறுதியாக விமானத்தின் சிதைவுகளா என்பதை சரிபார்த்துவருவதாகவும் அவர் கூறினார்.
"சரியாக எந்த இடத்தில் விமானம் விழுந்தது என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வருகிறோம்.
இன்றிரவு அதனைக் கண்டுபிடித்துவிட முடியும். மேலே குறிப்பிட்ட தீவுகளுக்கு இடையில் கடலின் ஆழம் சுமார் 20-23 மீட்டர் இருக்கும்" என்றும் பாம்பாங் கூறினார்.
காணாமல் போன விமானத்தில் 50 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்களில் 7 பேர் சிறார்கள், 3 பேர் குழந்தைகள் என்றும் இந்தோனீசிய போக்குவரத்து அமைச்சர் புடி கர்ய சுமாடி தெரிவித்தார்.
|
|