மிச்சமிருக்கும் பிரச்னைகளையும் தீர்க்க சீன அமைச்சரிடம் வலியுறுத்தல்!
|Saturday, 27th February 2021|Political|
Page Views: 5
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் 75 நிமிடம் தொலைபேசியில் உரையாடிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லைப் பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகளை தீர்க்க இரு தரப்பினரும் விரைவாக செயல்பட வேண்டும் என்றார்.
இந்திய - சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியிலிருந்து இரு நாட்டு படைகளும் கடந்த வாரம் வாபஸ் பெற்றன. அதனைத் தொடர்ந்து பிப்., 20 அன்று இரு நாட்டு ராணுவ படைத்தலைவர்கள் இடையே 16 மணி நேர பேச்சுவார்த்தை நடந்தது. இதர சர்ச்சைக்குரிய பகுதிகளான டெப்சாங், ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா ஆகியவற்றிலிருந்தும் படைகளை வாபஸ் பெற விவாதிக்கப்பட்டன. ஆனால் அது பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் வியாழனன்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 75 நிமிடங்கள் உரையாடினார். அது தொடர்பான அறிக்கை இந்தியா தரப்பில் இன்று வெளியிடப்பட்டது.
அதில், எல்லையில் ஏற்கனவே இருந்த நிலையை சீனா தன்னிச்சையாக மாற்ற முயன்றதன் விளைவாகவே இரு தரப்பு உறவுகளும் பாதிக்கப்பட்டது என ஜெய்சங்கர் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது. மற்ற சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்தும் படைகள் வெளியேற வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “தற்போதுள்ள நிலைமை நீடிப்பது இரு தரப்பினருக்கும் நன்மை பயக்காது. எனவே, எல்லையில் மீதமுள்ள பிரச்சினைகளை தீர்க்க இரு தரப்பினரும் விரைவாக செயல்பட வேண்டும்.
அனைத்து சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்தும் படைகளை விலக்குவது அவசியம். அது மட்டுமே அமைதியை மீட்டெடுக்கும். இருதரப்பு உறவினையும் முன்னேற்றும்.” என பேசியுள்ளார்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.