எமது வடகிழக்கில் நாளை (20 ஆம் திகதி) கதவடைப்பு போராட்டத்தினை முன்னெடுக்க ஒரு சில அரசியல் கட்சிகள் ஆயத்தமாகியுள்ளன.
சில கட்சிகள் இணைந்து கடந்த வாரங்களில் மனித சங்கிலி போராட்டங்களை முன்னெடுத்து இருந்தனர் .அது வெற்றி அளிக்கவில்லை. இப்பொழுது ஒரு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம், நில அபகரிப்பு செயல்முறைகள், சிங்கள பௌத்த மயமாக்கல் , மேய்ச்சல் தரை பிரச்சினைகள் போன்ற அனைத்து விவகாரங்களுக்கும் சேர்த்து முழுவதுமான ஒரு கடையடைப்பு போராட்டமாக முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக நாம் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் உள்ளோம். யாருக்காக இந்த கடையடைப்பு போராட்டங்கள்..? உண்மையில் எதற்காக இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன? இவற்றினால் ஏற்படப் போகும் நன்மைகள் என்ன? நமது நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் எமது வடக்கு கிழக்கில் இந்த கதவடைப்பு போராட்டம் அவசியமானதா?
பொருளாதார சிக்கலில் திண்டாடிவரும் மக்களுக்கு இவ்வாறான போராட்டங்களில் பங்குபற்றுவதற்கான ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. இதுவொரு திட்டமிடப்பட்ட தந்திர அரசியல் நகர்வு.ஒருநாள் கடையடைப்பு செய்வதால் எமது வடகிழக்கு மக்களின் அனைத்து பிரச்சினைகளும் முடிவு பெற்றுவிடுமா ?
என்னை பொருத்தவரை இப்போராட்டத்தினால் ஒரு நாள் வருமான இழப்பு மட்டுமே மக்களுக்கு மிச்சம். அன்றாடம் ஒருவேளை உணவிற்காக கூலி வேலை செய்யும் பாமர மக்களை பற்றி யோசித்துப்பாருங்கள்.இவர்களின் சுயநல அரசியலின் இறுதியில் மக்களே பலியாகின்றனர். இதனால் வேறொரு நன்மையும் கிட்டப்போவது கிடையாது .
மக்களுக்கு தீர்வினைப் பெற்றுத்தரும் சிறந்த வழியினை அறியாத தமிழ் அரசியல்வாதிகளின் தந்திரமான அரசியல் நாடகம் இது. இதற்கு முன்னரும் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்தனர் இருப்பினும் என்ன தீர்வை எம்மக்களுக்கு பெற்றுக் கொடுத்து விட்டார்கள்.
மக்கள் ஆதரவினை பெற முடியாத ஒரு தர்ம சங்கட நிலையிலேயே எமது தமிழ் அரசியல் தலைமைகள் இப்போது உள்ளனர். எனவே இது வெறும் அரசியல் கண் துடைப்பாகவே தென்படுகின்றது. தங்களையும் தங்கள் அரசியல் கட்சிகளையும் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களாகிய நாங்கள் அவதாரமாக சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். யதார்த்த நிலை என்ன என்பதை நாம் அறிவோம். பருவகாலங்கள் போன்று மாறி மாறி வந்து போகும் அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.