சுயநல அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொண்ட தமிழ் மக்களின் சுதந்திர தினம் ?
|2024-02-05 12:59:03|General|
Page Views: 262
நேற்றைய தினம் கிளிநொச்சியில் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களால் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இப்பேரணியில் 500ற்கும் குறைவான நபர்களே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
உண்மையில் மக்கள் இன்று அரசியல்வாதிகளை பற்றி நன்கு புரிதலுக்கு வந்து கொண்டிருக்கும் போது ஸ்ரீதரன் போன்ற அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை அடைந்துக்கொள்வதற்காக மக்களை திசை திருப்பி அவர்களிடம் இனவாதங்களை விதைத்து குழப்பத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.
நேற்றைய தினம் வடகிழக்கில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின நிகழ்வுகள் மற்றும் ஆலயங்களில் சுதந்திர தின சிறப்பு வழிப்பாடுகள் சந்தோசமாக முன்னெடுக்கப்பட்டிருந்த வேளையில் இவ்வாறான சுயநல அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக மக்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் கொண்டு எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
சுதந்திர தினம் என்பது நாட்டிலுள்ள அனைவரும் சந்தோஷத்துடன் அனுஷ்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் .அத்தோடு சுதந்திர தினமானது தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் என அனைவருக்கும் பொதுவானது. அவ்வாறான ஒரு சிறப்பான தினத்தில் இவ்வாறு எதிர்ப்பு ஊர்வலங்கள், போராட்டங்கள் செய்வது செய்வது உண்மையில் ஏற்புடையதல்ல. 30 வருட யுத்தத்தில் பெற்றுக் கொள்ள முடியாதவொன்றை ஒருநாள் போராட்டத்தில் பெற்றுக் கொள்ள முடியுமா சிந்தித்துப் பாருங்கள்.
எமது வடகிழக்கில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன. குறிப்பாக வாழ்வாதார பிரச்சினையாக காணப்படும் வடகிழக்கு மீனவர் பிரச்சினை மற்றும் குடிநீர் பிரச்சினை , திண்ம கழிவகற்றல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்த விடயங்களுக்காக எந்த ஒரு அரசியல்வாதியும் இதுவரை குரல் கொடுத்தது கிடையாது. இவற்றையெல்லாம் பேசி தீர்க்காத இவர்கள் , இல்லாதவற்றை கூறி நேற்றைய தினம் பேரணியை முன்னெடுத்திருந்தமைக்கு அவர்களின் சுயநல அரசியல் மாத்திரமே காரணமாகும்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் பல்கலைக்கழக மாணவர்களை பேரணியில் இணைத்துக்கொண்டமை ஆகும்.இதனால் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பதை எவரும் அறியவில்லையா?
தெற்கில் உள்ள மக்கள் அவர்களின் போலி பிரதிநிதிகளை இனங்கண்டு முழுமையாக ஒதுக்கி வைக்க முனைகிறார்கள்.நமது மக்கள் இன்னும் எமது அரசியல்வாதிகளின் அரசியல் நாடகங்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின் வாக்குகளுக்காக தந்திரமாக தாம் பயன்படுத்தப்படுவதை அறியாதவர்களாக இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.