பதவிக்கான ஆசையில் பரிதவிக்கும் எமது தமிழ் அரசியல் தலைமைகள்??
|2024-07-18 10:16:22|Political|
Page Views: 469
தற்போது அவர்களின் ஒரு சில முரணான காய்நகர்த்தல்கள் அவ்விடயத்தை வெளிகாட்டுவதாக தோன்றுகிறது. சம்பந்தன் ஐயாவின் மறைவிற்குப் பின்னர் அவ்விடத்தை பிடிக்க மிகப்பெரிய போட்டி நிலவுவதாக தெரிகின்றது. ஏற்கனவே இது பற்றிய ஒரு சில தகவல்கள் வெளியே கசிந்த நிலையில் தற்போது சிம்மாசனம் ஏறப்போவது யார் என்பது பற்றி பல்வேறு கருத்து மோதல்கள் நிலவுவதாகவும் தெரிகிறது.
ஒரு பக்கம் செல்வம் அணியினரும் மறு பக்கம் சட்டத்தரணி அணியினரும் தங்களுக்குள் கடுமையான போட்டியை சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.
சொல்லப்போனால் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு இரு பதவிகள் இருந்தன. ஒன்று திருமலை மாவட்ட எம்.பி பதவி மற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவி.
அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தேர்தல் சட்டங்கள் படி அவருக்கு அடுத்ததாக அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்ற சண்முகம் குகதாசனுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் யார் என்பதுதான் தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளது ?
அதற்கான பதவி மோதல் தற்போது கட்சிக்குள்ளும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் இடம் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இவர்கள் எவருமே தலைமை பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள வரவில்லை. தங்களுக்கு ஒரு தலைமை பதவி வேண்டுமென்ற பதவி வேட்கையில் மாத்திரமே தலைமை பொறுப்பை தேடி அலைகின்றனர்.
சம்பந்தன் ஐயா வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்குமாறு ஏற்கனவே ரெலோ அமைப்பு கோரிக்கை முன்வைத்திருந்தது. இதற்கு புளொட் அமைப்பும் ஆதரவு தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் சம்பந்தன் ஐயா அவர்களின் செல்ல பிள்ளையாக இருக்கும் சட்டத்தரணி ஒருவரும் நான்தான் அடுத்த தலைமை என்னும் நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது .
இவர்கள் ஒன்றும் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பதற்காகவோ அல்லது தாயக மக்களின் உரிமைகளை வென்று கொடுப்பதற்காகவோ தாயகத்தின் அபிவிருத்திக்காகவோ தலைமை பொறுப்பை கேட்கவில்லை. தங்களின் உயர்வை எட்டிக் கொள்வதற்காகவும் தங்களின் குறுகிய கால தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் மாத்திரமே தலைமை பொறுப்புக்கான போட்டியில் குதித்துள்ளனர்.
"மாபெரும் அரசியல் ஆளுமையை இழந்துவிட்டோம்" என ஊடக சந்திப்புகளிலும் பொது வெளிகளிலும் கூறித் திரிந்தாலும் "அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்" என்ற மனநிலையிலேயே அனைவரும் இருந்ததாக கூறப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது பல கட்சிகளை ஒன்றிணைத்து, தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் 2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சம்பந்தன் ஐயா அவர்களை தலைவராக தெரிவு செய்ததும் அவரே..அத்தனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்சியானது இன்று தனது கட்டமைப்பைபிணைத் தொலைத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தற்போது செயல் இழந்து போய் உள்ளது .கூட்டமைப்பு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது. அவ்வாறு இருக்கும் போது அப்பதவிக்கு பொருத்தமான ஒருவரை தெரிவு செய்வது என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
தற்போது எமது கேள்வி ஒன்றே ஒன்றுதான் இதுவரை தமிழ் தேசிய அரசியலில் இவர்களால் மக்களுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்ட அதி உயர்ந்த வரப்பிரசாதங்கள் என்று வரலாற்றில் ஏதாவது உள்ளதா? காலம் காலமாக மக்களை ஏமாற்றி வந்தவர்கள் இப்போது தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்டு ஏமாற்றப் போகிறார்கள். பெரிதாக மாறபோவது வேறொன்றும் இல்லை. தலைமைப் பொறுப்பு எப்படியும் இறுதியில் குரங்கு கையில் கிடைத்த பூமாலை கதைதான் ஆகப்போகிறது. தமிழ் அரசியல் தலைமைகள் எமது தாயகத்தின் நீங்காத சாபம்.!!!!!!!
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.