அமெரிக்க (US) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த போகும் தனது முன்மொழிவுகள் மற்றும் நடவடிக்கைகளை பற்றி அறிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், காணொளி உரையாடல் மூலம் அவர் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதன்போது, உலகளாவிய ரீதியிலான எண்ணெய் விலைகள் - குறைப்பு, வட்டி விகிதங்கள் மற்றும் வரிகளை குறைக்க வேண்டியதன் அவசியங்கள் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே நேரத்தில், வெளிநாடுகளுக்கு தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்த போகும் சுங்க வரிகளின் சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார்.
நிதி நிறுவனங்களிடமிருந்து உடனடி வட்டி விகிதக் குறைப்புகளைக் கோருவதாக ட்ரம்ப் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதேபோன்ற கொள்கை உலகளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தாம் நம்புவதாக அவர் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, எரிசக்தி பொருட்களின் விலை நிர்ணயங்களை உறுதிப்படுத்தும் வகையிலும் எண்ணெய் விலைகளைக் குறைக்கவும் சவுதி அரேபியா மற்றும் OPEC ஆகியவற்றிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் ட்ரம்ப் இதன்போது தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்த போகும் ட்ரம்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகளின் பின்னர் உலக பொருளாதாரத்தில் ஏற்பட போகும் மாற்றங்கள் குறித்து பலரது கவனம் திரும்பியுள்ளது.