பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதாவின் நல்லடக்கம் இன்று

user 31-Dec-2025 சர்வதேசம் 38 Views

பங்களாதேசத்தின் முதல் பெண் பிரதமரும், எதிர்க்கட்சியான பங்களாதேச தேசியக் கட்சியின் தலைவியுமான கலீதா ஷியா நேற்று அதிகாலையில் காலமானார். அவரது மறைவை அடுத்து, மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

கலீதா ஷியாவின் மறைவை அடுத்து தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முகமது யூனுஸ், ‘இன்று நாட்டுக்கு மிகவும் துயரமான நாள். நாட்டின் ஜனநாயக அரசியலின் முன்னணி ஆளுமையாக விளங்கிய கலீதா ஷியா இன்று நம்மிடம் இல்லை. ஜனநாயகம், பல கட்சி அரசியல் கலாசாரம், மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டம் ஆகியவற்றில் அவரது அசாதாரண பங்கு வரலாற்றில் நிலைத்திருக்கும்.

தேசத்தின் இந்த கடினமான காலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த துக்க தருணத்தைப் பயன்படுத்தி யாரும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கவோ, நாசகாரச் செயல்களில் ஈடுபடவோ அனுமதிக்காதபடி அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும். அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் இன்றைய தினம் (டிசம்பர் 31ஆம் திகதி) பொது விடுமுறை என அறிவிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

நீண்டகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 06 மணியளவில் உயிரிழந்ததாக அவரது கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஈரல் பாதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு காலிதா உள்ளாகியிருந்தார். கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை சீராகவில்லை. கடந்த டிசம்பர் 11ஆம் திகதி முதல் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். வெளிநாட்டு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

பங்கதேசத்தின் முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மானின் மனைவியான கலீதா, 1981 இல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலில் நுழைந்தார். 1984ஆம் ஆண்டு முதல் பிஎன்பி கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்த அவர், 1991 முதல் 1996 வரையிலும், மீண்டும் 2001 முதல் 2006 வரையிலும் வங்கதேசத்தின் பிரதமராக பதவி வகித்தார்.17 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வந்த அவரது மூத்த மகன் தாரிக் ரஹ்மான், சில நாட்களுக்கு முன்புதான் வங்கதேசம் திரும்பியுள்ளமை தெரிந்ததே.

Related Post

பிரபலமான செய்தி