முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tennakoon) கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்து வருவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும், தேசபந்து தென்னக்கோன் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும், கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவர் இதுவரை நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து தென்னக்கோன் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அத்துடன், தேசபந்து தென்னக்கோனை கைது செய்வதற்கான, பிடியாணை இருக்கின்ற நிலையில், அவர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு உதவும் எந்தவொரு நபரும் தண்டனைச் சட்டத்தின் 209வது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசபந்து தென்னகோனுக்கு எந்த ஒரு சிறப்பு சலுகையும் வழங்கப்படாது, மற்ற சந்தேக நபர்களைப் போலவே நடத்தப்படுவார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.