ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் 200 வருட கால மலையக மக்களின் இன்னல்களுக்கு முடிவு கட்டப்படுமா ? நாடு முழுவதும் ஏற்பட்ட மாற்றம் இன்று மலையகத்திலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை காலமும் மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகள் என்று கூற எதுவுமே இல்லை என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
மலையகத்தை பொருத்தவரையில் மாற்றம் அடைய வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன . மலையக அரசியல் கட்சிகளால் வழங்கப்பட்ட கடந்த கால வாக்குறுதிகள் அனைத்தையும் மக்கள் நன்கு அறிவார்கள். வாக்குறுதிகளுக்கு மட்டும் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற முட்டாள்தனத்திற்கு கடந்த தேர்தலில் மக்கள் சிறந்த பாடம் ஒன்றைப் புகட்டி உள்ளனர் . மலையக அரசியல்வாதிகளே, மலையக மக்களை உங்களது வாக்குறுதிகளில் மடக்கி விடலாம் எனும் எண்ணங்களை நிறுத்திக் கொள்ளுங்கள் .இதில் சில கட்சிகள் எதிர்கால உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களை முன்னிறுத்தி இப்போதே பிள்ளையார் சுழிப் போட ஆரம்பித்துள்ளன.
தற்போது மலையக மக்களுக்கு தனி வீடு திட்டம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் என்று வாய்க்கு வந்தவற்றையெல்லாம் மலையக தமிழரசியல் வாதிகள் பேச ஆரம்பித்துள்ளனர் . இதுவும் ஒரு அரசியல் நாடகமே! மலையக மக்களின் வேதன உயர்வை மட்டுமே பேசும் மலையக அரசியல்வாதிகளே சற்று யோசித்துப் பாருங்கள். எம் மக்களுக்கான தேவைகள் அனைத்தும் பெருந்தோட்ட நிர்வாகங்களால் முறையாக கிடைக்கப்பெறுகின்றதா ? பெருந்தோட்ட நிர்வாகங்கள் பல பல்வேறு நிபந்தனைகளை முன்னிறுத்தி மக்களின் உழைப்பை இன்று சுரண்டிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு உழைக்கும் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முறையாக சென்றடைகின்றதா பெருந்தோட்ட நிர்வாகங்கள் மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்றதா ? பொருளாதார ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றதா என்பதை முதலில் ஆராய வேண்டும்.
மதுபான கடைகளை நடத்தும் அரசியல்வாதிகளுக்கு எங்கிருந்து தெரியப் போகிறது அட்டைக் கடையில் எமது தாய்மார்கள் சிந்தும் இரத்தத்தின் மதிப்பு? மலையக மக்களின் வாழ்வை இருளை நோக்கித் தள்ளியவர்கள் மலையக அரசியல்வாதிகளே. அபிவிருத்திகாக வழங்கப்பட்ட பணத்தினை தங்கள் சொகுசு வாழ்விற்கு பயன்படுத்திவிட்டு இன்று மலையக பிரதேசங்களை முழுமையாக அபிவிருத்தி அடையாத பிரதேசங்களாக வைத்திருக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அண்மையில் பிரபல அரசியல் கட்சியால் நிர்வகிக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று அதன் முகாமையாளரால் தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமை தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதனை கட்சி மேலிடம் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கின்றது என்பது வேதனைக்குரிய விடயம். இவர்கள்தான் பொறுப்புள்ள தலைமைகளா ?
மக்களே இது நாம் சிந்திக்க வேண்டிய காலகட்டம் எதிர்வரும் உள்ளூர் ஆட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் நோக்கமாகக் கொண்டு கட்சிகள் செயலற்பட ஆரம்பித்து விட்டன. எனவே நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். அவர்களின் போலி வாக்குறுதிகளுக்கு நாம் செவி சாய்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எமது மலையகம் மாறுவதற்கான சாத்தியம் எமது கைகளிலேயே உள்ளது. அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது எமது கடமை. நமது எதிர்கால தலைமுறையாவது இம்மண்ணின் சிறப்பான வாழ்க்கையொன்றை வாழட்டும்.!