வவுனியாவில் இளம் குடும்ப பெண் ஒருவரை மிரட்டி தகாதமுறைக்கு உட்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (7) வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 31 வயது குடும்ப பெண் ஒருவரை 2023 ஆம் ஆண்டு யூன் மாதம் அயலில் வசிக்கும் குடும்பஸ்தரான 37 வயது நபர் ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து மிரட்டி தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.
அத்தோடு, இதனை அவர் காணொளியாக பதிவு செய்துள்ளதுடன் அதனை வெளியிடுவேன் என மிரட்டி பெண்ணை மீண்டும் பல தடவை அழைத்து தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனால் கர்ப்பமான குறித்த பெண் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.
இதனையடுத்து பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பெண் முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து, சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
இந்தநிலையில் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முள்ளியவளைப் பகுதியில் உள்ள காட்டில் மறைந்திருந்த நிலையில் 37 வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.