மாகாண சுகாதாரசேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து (தாதியர்களுக்கு தனியான வரவு வழங்ககோரி) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் இன்று(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட பிரதேசத்தின் ஏனைய மருத்துவமனையில் பணியாற்றும் தாதியர்கள் இந்த பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதேவேளை, இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் அரச தாதியர் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் செ.விஜயதீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அதில், இலங்கையின் எந்த ஒரு பகுதியிலும் இல்லாத ஒரு செயற்பாட்டினை வடமாகாணத்திற்குள் மட்டும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார் எனவும் குறித்த அறிவுறுத்தல் படி 50 ஊழியர்கள் கொண்ட இடங்களில் அனைவருக்கும் பொதுவாக ஒரு கையெப்பம் இடும் புத்தகத்தினை பாராமரிக்குமாறு பணித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை நடைமுறைப்படுத்தாத சந்தர்ப்பத்தில் மேலதிக நேரக்கொடுப்பனவு உட்பட்ட விடையங்களை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனவும் இந்த விடையம் தாதிய உத்தியோகத்தர்களை பாதித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இது தொடர்பில் வடமாகாண தாதிய உத்தியோகத்தர் தொழில் சங்கத்தினால் வடமாகாணசுகாதாரசேவைப்பணிப்பாளர்,வடமாகாணஆளுனர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு எந்த விதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை இதன்காரணமாக அடையாள தொழில்சங்க நடவடிக்கையாக வேலைநிறுத்தப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.