ரஷ்யாவில் தஞ்சம் அடைந்த சிரிய ஜனாதிபதி !

user 09-Dec-2024 சர்வதேசம் 122 Views

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள, தப்பியோடிய சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் (Bashar al-Assad ) மாஸ்கோ (Moscow) வந்தடைந்ததை ரஷ்ய அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மனிதாபிமான காரணங்களுக்காக ரஷ்யா அவர்களுக்கு புகலிடம் அளித்துள்ளது என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான சிரியாவில், 2000ம் ஆண்டில் இருந்து ஜனாதிபதியாக பஷர் அல் அஸாத் இருந்துள்ளார்.

அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவருடைய தந்தை ஹபீஸ் அல் அஸாத் ஜனாதிபதியாக இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து பதவியேற்ற அஸாத், தந்தை வழியில் எதிர்ப்பாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்.

கடந்த, 2011ல் அரசுக்கு எதிராக தொடங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள் இணைந்தன.

இந்நிலையில், அல் - குவைதா அமைப்பின் ஒரு பகுதியான, எச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற அமைப்பு தலைமையிலான அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம்  27ஆம் திகதி தீவிர தாக்குதலை தொடங்கின.

அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் சுற்றி வளைத்தன.

இதைத் தொடர்ந்து, டாரா, குனேத்ரா, சுவேடா ஆகிய நகரங்களையும் கைப்பற்றின. எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை, கிளர்ச்சி படைகள் நேற்று கைப்பற்றின.

தலைநகரை கிளர்ச்சிப்படைகள் நெருங்கியதை அறிந்த ஜனாதிபதி அஸாத், விமானம் மூலம் தப்பிச் சென்றார்.

இதையடுத்து, நாட்டின் நிர்வாகம் தங்களுடைய கட்டுப்பாட்டுகள் வந்துள்ளதாக கிளர்ச்சிப் படைகள் தெரிவித்தன.

ஆனால் அஸாத் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற தகவல் வெளியாகாமல் மர்மமாக இருந்தது.

இந்நிலையில், ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தப்பியோடிய அஸாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யா, மொஸ்கோவில் தஞ்சம் புகுந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related Post

பிரபலமான செய்தி