முல்லைத்தீவு - தியோகுநகர்ப் பகுதியில் தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் போராடியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது எதிர்வரும் ஜனவரிமாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக குறித்த தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26.05.2024ஆம் திகதி கரைதுறைப்பற்றுப் பிரதேசசபைக்குரிய மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதியை, தனியார் நிறுவனம் அடாவடியாக வேலியிட்டுத் தடுத்தமையால், அப்பகுதியை சேர்ந்ந பொதுமக்கள், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அடாவடியாக வீதியைத் தடுத்து அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியிருந்தனர்.
அந்தவகையில் இதுதொடர்பில் அவலோன் நிறுவனத்தின் முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, சிலாவத்தை தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள தியோகுநகர் கிராமத்தில், கடந்த 26.05.2024 ஆம் திகதியன்று, கரைதுறைப்பற்றுப் பிரதேசசபைக்குரிய வீதியினை தனியார் நிறுவனத்தினர் அடாவடியாக வேலிஇட்டுத் தடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந் நிலையில் அவ்வீதியைப் பயன்படுத்துகின்ற தியோகுநகர் கிராமத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்பகிறது.
எனவே தனியார் நிறுவனத்தின் இத்தகைய செயற்பாட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வீதியின் குறுக்காக அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியுமிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கரைதுறைப்பற்று பிரதேசசபை மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக அதிகாரிகள் வருகைதந்து நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.