இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் கடற்றொழில் நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தினர் இன்று(17.03.2025) அமைச்சரை யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
“இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் ஆவணப் படமொன்றை தயாரித்துள்ளனர். அதனை எனக்கு காண்பித்தனர்.
அதேபோல இந்திய கடற்றொழிலாளர்கள் எமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல, உள்நாட்டிலுள்ள சிலரும் தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமையை கடைபிடிக்கின்றனர்.
இவற்றை தடுத்து நிறுத்தினால் எமது நாட்டின் கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும். அதேபோல் கடற்றொழிலை நவீனமயமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
ஆழ்கடல் கடற்றொழிலுக்காக கப்பல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வெளிநாடுகள் முன்வந்துள்ளன. அவை ஊடாக ஆழ்கடல் கடற்றொழில் ஊக்குவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.