மின் கட்டணம் எவ்வளவு குறைக்கப்படும்!

user 06-Dec-2024 இலங்கை 252 Views

மின் கட்டணம் எவ்வளவு குறைக்கப்படும் என்பது தொடர்பில் இறுதிக் கணிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட பிரேரணையை இன்று (06) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

மேலும் திருத்தப்பட்ட முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வருடம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்திருந்தார்.

இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம் எனவும் கூறியிருந்தார்.

அத்துடன் மின் கட்டண திருத்தம் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபையினால் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தாங்கள் முன்வைத்துள்ள மின்சாரக் கட்டணக் குறைப்பு போதாது என்பதால் மீண்டும் முன்மொழிவுகளை மீள்திருத்தம் செய்து சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நவம்பர் 8 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்த போதிலும், மின்சார சபை அன்றைய தினம் முன்மொழிவை சமர்ப்பிக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது.

இதேவேளை நவம்பர் 22 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை கோரியிருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையிலே டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை இலங்கை மின்சார சபைக்கு கால அவகாசம் வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

 

 

Related Post

பிரபலமான செய்தி