டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை, நிதி நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளையும் வரி செலுத்துதலையும் எளிதாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
டிஜிட்டல் அடையாள அட்டை
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “எங்கள் அடையாள அட்டை இப்போது கொஞ்சம் பழையது, இப்போது அடையாள அட்டையை எடுத்துச் சென்றால் இது நீங்களா என்பார்கள். ஆனால் டிஜிட்டல் அடையாள அட்டை அப்படியில்லை.
உங்களுக்கு ஒரு டிஜிட்டல் அடையாள அட்டை கொடுக்கப்பட்டால், அதைப் படிக்க முடியும். வரி செலுத்துவதற்கும், வங்கிகளுடனான பரிவர்த்தனைகள் முதல் அனைத்தையும் செய்வதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.
தரவு உள்ளீட்டு நிலையங்கள்
டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்க 1,000 கோடி ரூபா உதவியை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா தரவுகளைத் திருடப் போகிறது என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் அது அவ்வாறு இல்லை.
இலங்கையின் மிகச்சிறந்த தரவு அறிவியல் நிபுணர்களுடன் 24 ஆம் திகதி ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டோம்.
நாடு முழுவதும் 2,300 கிராம அளவிலான தரவு உள்ளீட்டு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் தரவை உள்ளிடும்போது, இந்திய நிறுவனம் வெளியேறிவிடும். அதற்கு பின்னர் அது நமது கையில்தான் உள்ளது என்றார்.