யாழ். பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த எஞ்சிய 4 சந்தேகநபர்களும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று(05.02.2025) சரணடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 15ஆம் திகதி பிற்பகல் பருத்தித்துறை - கொட்டடிப் பகுதியில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 8 சந்தேகநபர்களில் ஏற்கனவே மூவர் பருத்தித்துறை பொலிஸில் சரணடைந்த நிலையில், அவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், எஞ்சிய நால்வரும் நேற்று புதன்கிழமை பருத்தித்துறை பொலிஸில் சரணடைந்துள்ளனர். அவர்கள் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.