இந்த நாட்டில் எந்த அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் புரிந்துகொள்ளாது. அதன்காரணமாக இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ளேயே வாழும் நிலை காணப்படுகின்றது என வடக்கு கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்காரணமாக எதிர்வரும், இலங்கையின் சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அனுஸ்டித்து போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கூறியுள்ளது.
வடக்கு - கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களின் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவிகள் பங்குகொள்ளும் ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன்போது வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி, கிளிநொச்சிமாவட்ட தலைவி க.கோகிலவாணி, வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெனிதா ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கருத்துகளை தெரிவித்தனர்.
எதிர்வரும் 04ஆம் திகதியை இலங்கை முழுவதும் சுதந்திரதினமாக கொண்டாடிக்கொண்டிருக்கும்போது வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் இதனை கறுப்பு நாளாக அனுஸ்டித்துவருகின்றோம்.
எமது உறவுகளை கைகளால் வழங்கியும் வெள்ளைவானிலும் கொண்டுசெல்லப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று 15வருடமாக எந்த நீதியும் வழங்காமல் இருப்பது மிகவும் மனவேதனையுடன் உறவுகளை தேடிவருகின்றோம் என அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.