முன்னாள் சபாநாயகர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்கள் பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல செலவு அறிக்கைகளை சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நாடாளுமன்றில் இன்று வெளியிட்டார்.
அதன்படி, 2024 நவம்பர் வரை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 70 ஊழியர்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
2024 ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 24 ஆம் திகதி வரை, முன்னாள் சபாநாயகர் 9 வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும், அந்த 9 மாத காலத்தில் மட்டும் எரிபொருளுக்காக ரூ.3.34 மில்லியன் செலவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், முன்னாள் துணை சபாநாயகர் 9 மாதங்களில் 6 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், எரிபொருளுக்காக 1.35 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளார் என்றும் சபைத் தலைவர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் துணைக் குழுத் தலைவர் 04 வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும், எரிபொருளுக்காக 7.2 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவித்ததை தொடர்ந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan), இவ்வாறான விடயங்களை வெளியிடும் போது பொதுவாக அனைவரையும் குறிப்பிடாமல் தொடர்புடைய நபரின் பெயரை கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
அத்தோடு, அரசாங்கம் என்ற நிலைப்பாட்டிற்கு வருமாறு கேட்டுக் கொண்டதுடன், இன்னமும் எதிர்க்கட்சியை போல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.