உணவு வழங்கவில்லை எனக் கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருத்தித்துறை - கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் எனக் கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் (01) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டனர்.
இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இருவரையும் நேற்று (02) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்த்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் அப்பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (02.12.2024) பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
உணவு முறையாக பகிர்ந்தளிக்கப்படாமை குறித்து கற்கோவளம் கிராம மக்களுக்கும், கற்கோவளம் கிராம அலுவலருக்கும் இடையே நேற்றையதினம் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, தனது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கற்கோவளம் கிராம சேவகர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு காரணமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த கற்கோவளம் கிராம சேவகரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை பத்துமணியளவில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது, தமது வீட்டில் மழை வெள்ளம் தேங்கியதால் தாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்ததாகவும், அங்கு கிராம சேவகர் வேண்டுமென்று தம்மை புறக்கணித்து தமக்கு உணவு வழங்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலரிடம் கேட்டபோது பக்கச்சார்பற்ற விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை ஏடுக்கப்படும் என்று தெரிவித்ததுடன், ஏதாவது முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.