ஈரானில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சும் அமெரிக்க தூதரகமும் அறிவுறுத்தி உள்ளன.
இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அவை வன்முறையாக மாறக்கூடும். அதனால் ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைச் சாராத வகையில் ஈரானை விட்டு வெளியேறுவதற்கான ஒரு திட்டத்தை வைத்திருங்கள். உங்களால் வெளியேற முடியாவிட்டால், உங்கள் வசிப்பிடத்தில் அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பான கட்டடத்தை கண்டறிந்து அங்கு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஈரானின் எல்லா நகரங்களிலும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்களை ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய் பாராட்டியுள்ளார். ‘எதிரிகள் ஈரானிலுள்ள உள்நாட்டு முகவர்கள் மூலம் எமது நாட்டை சீர்குலைக்க மேற்கொண்ட சதி முயற்சியை முறியடித்தன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளீர்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப,
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
‘ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வணிகத்திற்கு 25 சதவீத வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது’ என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டுள்ள நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள இந்த 25 சதவவீத வரியால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நாடுகளாக சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்டவை விளங்குகின்றன. ஈரானுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் 5 முக்கிய நாடுகளில் இவை உள்ளன. அத்தோடு துருக்கியும், ஐக்கிய அரபு அமீரகமும் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரிவிதிப்புக்குப் பின்னால் ஈரானில் நடைபெறும் போராட்டங்கள் உள்ளன. ஈரான் அணுவாயுத தயாரிப்பில் ஈடுபட்டதால், அந்நாட்டின் மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
இதனால் ஈரான் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதன் விளைவாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘ஈரான் சுதந்திரத்தை எதிர்நோக்கியுள்ளது. அங்கு இதுவரை இல்லாத அளவில் போராட்டம் நடைபெறுகிறது. ஈரான் மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது’ என சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ள போதிலும் அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனால், படையெடுப்புக்கு முன்னோட்டமாக அமெரிக்கா வரி விதிப்பைத் தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் பாதுகாப்பு படைகளை உச்ச பட்ச விழிப்பு நிலையில் வைத்துள்ளதோடு கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கலவரங்களில் கொல்லப்பட்டவர்களுக்காக மூன்று நாட்கள் துக்க தினத்தையும் அறிவித்துள்ளது.