சுவிஸ்ட்ஸர்லாந்து நாட்டில் வாழும் தமிழ்பேசும் தொழில் முனைவோர்களுக்கிடையில் கூட்டுறவையும் ஒன்றினைவையும் பலப்படுத்தி தமிழ் மக்களின் அறிவியல், சமூக, பொருளாதார, ஆன்மிக கலை பண்பாட்டு பாரம்பாரிய அலகுகளை கட்டியமைத்தல், தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் சமூகமேம்பாட்டினையும் இலக்காகக்கொண்டு சுவிஸ் தமிழர் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவகம் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைவர் இளையதம்பி சிறிதாஸ் தலைமையில் சூரிச் கில்டன் கார்டன் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சுவிஸ்நாட்டில் வாழும் தமிழ் வர்த்தகர்களும் பெருந்தொகையான சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
சுவிஸ்நாட்டில் வாழும் தொழில் முனைவோர்களுக்கிடையில் கூட்டுறவு ஒற்றுமை, கூட்டுமுயற்சிக்கு பங்காற்றுவதுடன் தமிழர்களின் கலைகலாச்சார பொருளாதார அறிவியல் உட்பட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பங்காற்றல். அனைத்து அரசுகளின் ஒத்துழைப்புடன் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உற்பத்திகளை அதிகரிக்கக்கூடிய தொழில் முயற்சிகளை இயற்கைவளங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் செயற்திட்டங்களை வகுத்து செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அமைப்பின் தலைவர் இளையதம்பி சிறிதாஸ் தெரிவித்தார்.
அத்துடன் உலகளாவிய ரீதியில் உள்ள தனவந்தர்கள் தொழில் அதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் நிபுணத்துவசேவையினையும் பெற்றுக்கொண்டு இலங்கையில் புதிய முதலீடுகள் தொழில் முயற்சியாண்மை வேலைத்திட்டங்களில் ஈடுபடவிரும்பும் தொழில்முனைவோருக்கு ஆலோசனைகளையும் ஒத்தாசைகளையும் வழங்கவுள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சுவிஸ்நாட்டில் வாழும் இலங்கையைப்பூர்வீகமாகக்கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட தொழில் முனைவோர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அமைப்பின் உறுப்புரிமையைப்பெறமுடியும் என அமைப்பின் செயலாளர் இராசமாணிக்கம் ரவிந்திரன் தெரிவித்தார்..
நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய சமயக்குருக்களும் சமூக ஆர்வலருமான சசிக்குமார் தர்மலிங்கம் கருத்துத்தெரிவிக்கையில்
சுவிஸ்தமிழ் வர்த்தகர்களுக்கு நமதுசமூகத்தை நோக்கி பல்வேறு பொறுப்புக்குள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய இந்த நிறுவனத்தினை சிறந்தமுறையில் கட்டியெழுப்பி ஆக்க பூர்வமான சிந்தனைகளுடன் செயற்படவேண்டும்.
தற்போது சுவிஸ் நாட்டில் 11500ற்கு மேற்பட்ட தமிழர்கள் ஓய்வூதியத்தைப்பெறவுள்ளனர் இவர்களுக்கான எதிர்கால வாழ்க்கையினைப்பெற்றுக்கொடுக்க மூதாளர்கள் தங்குவதற்கான இல்லமொன்றினையும் அமைக்கவுள்ளோம் என்றார்.